ஞாயிறு, ஜனவரி 20, 2013

நூலகர் என் செல்வராஜாவுடனான சந்திப்பு




உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் நூலகர் என். செல்வராஜா அவர்களுடனான சந்திப்பு 20.01.2013 ஞாயிறு காலை 10.00 மணிக்கு யா/நெல்லியடி மத்திய மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

உயில் செயற்பாட்டாளர்களில் ஒருவராகிய சு. குணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தொடக்கவுரையை ‘நீங்களும் எழுதலாம்’ ஆசிரியர் எஸ்.தனபாலசிங்கம் நிகழ்த்தினார்.

தொடர்ந்து நூலகர் என். செல்வராஜா உரை நிகழ்த்தினார். தனது உரையில் நூல்தேட்டம் தொகுதிகள் பற்றியும், ஆவணப்படுத்தலில் ஈடுபடுபவர்கள் எதிர்கொள்ளும் சுமைகள் பற்றியும், இவை பற்றி ஈழத்துப் படைப்புலகமோ நூலகங்களே பெரியளவில் கரிசனை கொள்ளாமல் இருப்பதன் துர்ப்பாக்கிய நிலை பற்றியும், தனது அனுபவங்களினூடாக எடுத்துரைத்தார். நிகழ்வுக்கு வருகை தந்த எழுத்தாளர்கள் ஆர்வலர்கள் பற்றிய அறிமுகமும் இடம்பெற்றது.

நிகழ்வில் வடமாட்சிப் பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சில பாடசாலை நூலகங்களுக்கும் பொது நூலகங்களுக்கும் தனது நூற்தொகுதிகளை பிள்ளைகளின் வாசிப்புக்கும் தேடலுக்கும் உதவும்முகமாக அன்பளிப்பாக வழங்கினார். நூல்தேட்டத்தின் தொகுதிகளான 1,3,4,5 ஆகியனவும் மற்றும் மலேசிய சிங்கப்பூர் தொகுதி, ஆங்கிலத் தொகுதி ஆகியனவும் செல்வராஜா எழுதிய ஏனைய நூல்கள் சிலவும் வழங்கப்பட்டன. இவ்வாறு சுமார் அறுபதினாயிரம் ரூபா பெறுமதியுடைய நூல்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

நிகழ்வில் கலந்துரையாடலும் இடம்பெற்றது. நிகழ்வுக்கு வருகைதந்த எழுத்தாளர்கள் தமது நூல்களின் பிரதிகளை நூல்தேட்டத் தொகுதியில் ஆவணமாக்குவதற்கு வசதியாக கொடுத்துதவினர். நன்றியுரையை எழுத்தாளர் சீனா உதயகுமார் நிகழ்த்தினார்.

படங்கள் – கமலசுதர்சன்
பதிவு – சு. குணேஸ்வரன்















ஞாயிறு, டிசம்பர் 30, 2012

ஞானம் 150 வது சிறப்பிதழ் அறிமுகநிகழ்வு



உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் ‘ஞானம்’ 150 வது சிறப்பிதழுக்கான அறிமுகநிகழ்வு 30.12.2012 ஞாயிறு காலை 9.30 மணிக்கு யா/தேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு எழுத்தாளர் சீனா உதயகுமார் தலைமை வகித்தார். சிறப்பிதழ் பற்றிய அறிமுகவுரையை ஞானம் நிர்வாக ஆசிரியர் ஞா. பாலச்சந்திரன் நிகழ்த்தினார்.

தொடர்ந்து உரைகள் இடம்பெற்றன. கட்டுரைகள் பற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளரும் எழுத்தாளருமாகிய இராஜேஸ்கண்ணன் நிகழ்த்தினார். கவிதைகள் பற்றிய உரையை கவிஞர் கருணாகரனும்; சிறுகதைகள் பற்றிய உரையை சின்னராஜா விமலனும்; நேர்காணல், கருத்தாடல், இதழ்வடிவமைப்பு பற்றிய உரையை தானாவிஷ்ணுவும் நிகழ்த்தினர்.

சிறப்பிதழின் முதற்பிரதியை கலாபூஷணம் மா. அனந்தராசன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன.

ஏற்புரையை ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரனும் நன்றியுரையை சு. குணேஸ்வரனும் நிகழ்த்தினர்.

ஒளிப்படங்கள் - கமலசுதர்சன்
பதிவு – சு. குணேஸ்வரன்


























வியாழன், டிசம்பர் 27, 2012

ஞானம் 150 வது இதழ் அறிமுகநிகழ்வு அழைப்பிதழ்

 
'உயில்' கலை இலக்கிய சங்கத்தின் 5 வது நிகழ்வாக "ஞானம்" 150 வது  சிறப்பிதழ் அறிமுக நிகழ்வு 30.12.2012 ஞாயிறு காலை 9.00 மணிக்கு யா/தேவரையாளி இந்துக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது. 
ஆர்வலர்கள் பங்குபெறலாம்.